கோவை மனம் (201-225)

 கோவை மனம் 201. தோல்வியை ஏற்றாலும் ஏமாறுவதும் ஏமாற்றுவதையும் ஏற்கவே கூடாது.

கோவை மனம் 202. நிகழ்காலத்தில் செய்யப்படும் உன்னுடைய செயற்பாடுகளே கடந்த காலத்தை வெற்றியுடையதாக்கவும் எதிர்காலத்தில் நிலைத்து நிற்பதற்கும் உதவும்.

கோவை மனம் 203. உன்னுடைய நண்பர்களிடமிருந்து நட்பிற்கான இலக்கணத்தைத் தேடாமல், உன்னுடைய தீவிர எதிரியின் எதிர்மறையிலிருந்து தேடு, நட்பிற்கான இலக்கணம் புரியும்.

கோவை மனம் 204. தவறு செய்தவனை மன்னிக்காதே. மன்னிப்பது மேலும் தவறு செய்யத் தூண்டும். தவறுக்கேற்ற தண்டனையை அவன் ஏற்றால் திருந்த வாய்ப்புண்டு. எனவே, தவறுக்கான தண்டனையை உடனே கொடு.

கோவை மனம 205. உலக மக்களை உண்மையான அன்புடன் மதித்துப் போற்றி வாழ்ந்தவனே சிறந்த மாமனிதன்.

கோவை மனம் 206. கோபம், ஒருவனின் பிறவிக்குணம் அல்ல. அது, தன்னைச் சார்ந்தவர்கள் மற்றும் சூழ்ந்தவர்கள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு.

கோவை மனம் 207. நீ, பதவிகளில் இருந்தபோது கிடைத்த பாராட்டுக்கள் உனக்குக் கிடைத்தவை அல்ல. பதவியேதும் இல்லாத போழ்தும் உன்னைத் தேடி வரும் பாராட்டுக்கள் மட்டுமே உனக்கான அங்கீகாரம்.

கோவை மனம் 208. உன்னை விட்டு வெளியேறிய நட்பை நாடாதே, என்றாலும் எப்பொழுதும் அவர்களைத் தூற்றாதே.

கோவை மனம் 209. தாய் உள்ளத்தோடு கேட்டு உணர்ந்து அறிந்த குரல் எத்திசையில் இருந்து வந்தாலும் தானாய் உணரும்.

கோவை மனம் 210. ஆண்ட காலங்கள் பல கடந்தாலும் ஆண்ட காலத்தை நிகழ் காலத்தார் போற்ற வாழ்ந்தவரே வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

கோவை மனம் 211. ஒத்த மனமும் உணர்வும் கொண்டோரிடம் என்றும் நட்பாய் இரு.

கோவை மனம் 212. உண்மையே பேசி வன்மம் தவிர்.

கோவை மனம் 213. உன் சக்திக்கும் மீறிய சுமையைச் சுமக்கும்போது ஏற்படும் அழர்ச்சிக்கு உற்ற துணை கை கொடுத்தால் அழர்ச்சி விலகும்.

கோவை மனம் 214. உதவி தேவைப்படுமோ என்ற யூகத்தில் உதவி தேவைப்படாதவர்க்குச் செய்வதைத் தவிர்.

கோவை மனம் 215. நடை பயிற்சியில் சுமை தூக்காதே.

கோவை மனம் 216. உன்னைக் கேள்வி கேட்கும் ஆளே இல்லை என்றாலும் உன் செயற்பாடுகளை எல்லோரும் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டால் எதிர்காலம் உனதாகவே இருக்கும்.

கோவை மனம் 217. உழைத்துப் பிழைப்பவன் பிறரைப் பற்றிப் பேச மாட்டான்.

கோவை மனம் 218. மண், பெண், பொன் மீது ஆசையுள்ளவனே தற்புகழ்ச்சி பேசுபவன்.

கோவை மனம் 219. ஞானியர் உரைபோல் இருந்தாலும் தற்புகழ்ச்சி பேசுபவனின் உரையில் வஞ்சகம் இருக்கும்.

கோவை மனம் 220. ஒருவனின் துன்பக் காலத்தில்தான் அவனின் உண்மை மனம் வெளிப்படும்.

கோவை மனம் 221. சுற்றத்தையும் நட்பையும் ஒருவன் தன் மனைவிக்குப் பிறகாகவும், ஒருவள் தன் கணவனுக்குப் பிறகாகவும் எண்ணி செயற்பட்டால் கணவன் மனைவிக்குள்ளே கருத்து வேறுபாடில்லாத வாழ்க்கை அமையும்.

கோவை மனம் 222. தொட்டில் உறவுகளைக் காட்டிலும் கட்டில் உறவுகளுக்கு முதன்மை கொடுத்து கூட்டுக் குடும்பமாக வாழ்க்கை நடத்துபவளே சிறந்த இல்லாள்.

கோவை மனம் 223.      வழிபாடுகளில் மூத்தோர் வழிபாடு சிறந்தது.

கோவை மனம் 224. கசடறக் கற்றவன், கற்பிக்கும்போது கற்பவன் கசடறவில்லை என்றால் கற்றவனால் எந்தப் பயனும் இல்லை.

கோவை மனம் 225. குற்றம் செய்தவனை தண்டிப்பவன் மனிதன், மன்னிப்பவன் ஞானி, தண்டிப்பதா மன்னிப்பதா என்று சிந்திப்பவன் அறிவாளி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவை மனம் (701-725)

கோவை மனம் (726-750)

கோவை மனம் (751-775)